கிளிநொச்சி – பளை காவல்துறை பிரிவிற்குட்பட்ட இயக்கச்சி, முகாவில் பகுதியில் கோவில் கட்டுமாண பணியில் இருந்த பணியாளர் ஒருவர் கட்டிட இடிபாட்டுக்குள் சிக்கி பலியாகியுள்ளார்.
இன்று இடம்பெற்ற இச் சம்பவத்தில், யாழ்ப்பாணம் சுழிபுரத்தைச் சேர்ந்த தவபாலன் சதீசன் (வயது – 27) என்பவரே பலியாகியுள்ளார்.
கோவில் கட்டிட வேலை ஒன்றில் கொங்கிரீட் போடும் வேலை இடம்பெற்றுக் கொண்டிருந்த போது முட்டுக்கொடுக்கப்பட்டிருந்த மரங்கள் விழுந்தமையால் கொங்கிரீட் சரிந்து கட்டிடம் வீழ்ந்தமையால் பணியாளர் கட்டிட இடிபாட்டுக்குள் விழுந்த நிலையில், பளை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற வேளை அவர் உயிரிழந்து விட்டாரென அறிக்கையிடப்பட்டது.
மற்றுமொருவர் காயமடைந்த நிலையில் பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக பளை காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.