முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பொலிஸாரால் தாக்குதலுக்குளான இரண்டு சிறுவர்கள் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் நேற்று முன்தினம் இரவு (02.02.2023) இடம்பெற்றுள்ளது.
15 மற்றும் 17 வயது நிரம்பிய சிறுவர்கள் இரண்டுபேர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
அயல்வீட்டில் உள்ள நண்பன் ஒருவரின் பிறந்தநாள் நிகழ்வுக்கு சென்று, பின்னர் அருகிலுள்ள தமது வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தனர்.
இந்தவேளை, அப்பகுதியால் முச்சக்கரவண்டியில் வந்துகொண்டிருந்த மூன்று பொலிஸார் மேற்படி சிறுவர்கள் இரண்டுபேரையும் வழி மறித்து அவர்களிடம் இருந்த தொலைபேசிகளை பறித்ததுடன், “எங்கு சென்று வருகிறீர்கள்… கஞ்சா குடித்து விட்டா வருக்கின்றீர்கள்” என கேட்டு தடிகளாலால் மிக மோசமாக தாக்கியுள்ளதாக பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்களின் பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்.
தாக்குதலுக்குள்ளான சிறுவர்களில் 15 வயதுடைய சிறுவனின் கைபெருவிரல் எலும்பு முறிவு ஏற்படுள்ளதோடு, மற்றைய 17 வயது சிறுவனுக்கும் மிக மோசமான உடல் அடி காயங்கள் ஏற்பட்டுள்ளது.
தாக்குதலுக்குள்ளான சிறுவர்களில் ஒருவர் தொடர்ந்தும் முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதுடன், ஒருவர் வைத்தியசாலையிலிருந்து நேற்றைய தினம் (04.02.2023) வீடு திரும்பியுள்ளார்.
தாக்குதல் இடம்பெற்ற அன்றைய தினம் இரவு, புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்வதற்காக பாதிக்கப்பட்ட சிறுவர்களின் பெற்றோர் சென்ற போதிலும், இரண்டு மணிநேரம் காத்திருக்க வைத்துள்ளனர்.
அத்துடன், பொலிஸாருக்கு எதிராக எம்மிடம் முறைப்பாடு செய்யமுடியாது எனவும் முல்லைத்தீவு உதவி பொலிஸ் அத்தியேட்சகர் அலுவலகத்தில் சென்று முறைப்பாடு செய்யுமாறு பணித்துள்ளனர்.
இதனை்போரில் அங்கு சென்று முறைப்பாடு பதிவு செய்துள்ளனர். அத்தோடு இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ் அலுவலகத்துக்கு முறைப்பாடு செய்வதற்காக ஏற்பாடுகளை பாதிக்கப்படுள்ள சிறுவர்களின் பெற்றோர் மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.